மரக்காணம் கழுவெளியில் தவறிவிழுந்து பலியான 3 சகோதரர்கள்... முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

 
லோகேஷ்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் கழுவெளியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்த அண்ணனைக் காப்பாற்ற இரட்டை சகோதரர்கள் இருவரும் நீரில் குதித்த நிலையில், 3 பேருமே சடலமாக மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார். 

லோகேஷ்

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், மரக்காணம் (தெற்கு) கிராமம் சந்தைத் தோப்புத் தெருவைச் சேர்ந்த திரு. லோகு (எ) லோகேஷ், த/பெ சுரேஷ் (வயது 24) என்பவர் கடந்த 22-12-2024 அன்று இரவு சுமார்  7.00 மணியளவில் மரக்காணம் அருகே உள்ள கழுவெளியில் மீன் பிடிக்கும் போது எதிர்பாராத விதமாக கழுவெளியில் தவறி விழுந்து விட்டார். அவருடன் மீன்பிடிக்க வந்த அவருடைய இரண்டு சகோதரர்களான விக்ரம் (20) மற்றும் சூர்யா (20) ஆகியோர் அவரை தேடும் போது, அவர்களும் கழுவெளியில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரையும் கழுவெளியில் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று (23.12.2024) மூவரும் தீயணைப்புத் துறையினரால் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் என்ற துயரமான செய்தியினை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 

முதல்வர் ஸ்டாலின்

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web