டெல்லியில் 3 மணிநேரம் பெய்த கன மழை.. முடங்கிய முக்கிய சாலைகள்

 
டெல்லியில் 3 மணிநேரம் பெய்த கன மழை.. முடங்கிய முக்கிய சாலைகள்

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், டெல்லியில் இன்று அதிகாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரை தொடர்ச்சியாக மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

டெல்லியின் சப்தர்ஜங் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 8.30 மணி வரை 138.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது பருவத்தின் மிக உயர்ந்த ஒரு நாள் மழை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆசாத் மார்க்கெட் பகுதியில் கனமழை பெய்து 1.5 அடி அளவுக்கு நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் இந்த வழி மூடப்படுகிறது என டெல்லி போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர். ஆசாத்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று, டெல்லியின் பிரகதி மைதான், லஜ்பத் நகர் மற்றும் ஜங்புரா பகுதிகள், ஐ.டி.ஓ. ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.

மூல்சந்த் பகுதியில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் வாகனங்கள் நீரில் மிதந்தபடியே செல்ல வேண்டி இருந்தது. இதனை தொடர்ந்து வாகன போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. நீர் தேங்கிய சூழலில் மின்டோ பிரிட்ஜ் பகுதியில் உள்ள சாலை மூடப்பட்டு உள்ளது என்றும் டெல்லி போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.

From around the web