ஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி... 55 கி.மீ. சூறாவளி... டிச.24 வரை மழைக்கு வாய்ப்பு!
![காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/3058da306a87928ff73a88aa4d3cc483.png)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று வட கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில் ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.
இதன் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் டிசம்பர் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று டிசம்பர் 19ம் தேதி தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், ஆந்திர கடலோரப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடலின் வடக்குப்பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடலில் தெற்கு பகுதி ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ வேகம் முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
நாளை டிசம்பர் 20ம் தேதி வடதமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!