திருமண மண்டபத்தில் வெடித்து சிதறிய டிரான்ஸ்ஃபார்மர்! மயக்கமடைந்த மணமகள்! மணமகன் தந்தைக்கு நெஞ்சுவலி!
சென்னை வியாசர்பாடியில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது, மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில், மின்சார பெட்டிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறி இருக்கிறது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் பயத்துடன் அலறியடித்து மண்டபத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர். அதன் பின்னர், உடனடியாக மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், தீ விபத்து நடந்து இரண்டு மணி நேரமாகியும் மின்சார ஊழியர்கள் மின்னிணைப்பை சரி செய்யவில்லை என்று திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விபத்து நிகழ்ந்த அதிர்ச்சியில் மணமகனின் தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட, மணமகளும் கீழே மயங்கி விழுந்தார். பின்னர், இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
ஏற்கெனவே மின்சார தீ விபத்து, மணமகள் மயக்கம், சம்பந்திக்கு நெஞ்சுவலி என்று பதற்றத்தில் இருந்த உறவினர்களும், நண்பர்களும், திருமண வரவேற்பு நிகழ்ச்சி இரத்து செய்யப்படுவதாக அறிவித்து விட்டு, இன்னும் மின் இணைப்பு சரிசெய்யப்படவில்லை என்று ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று வியாசர்பாடி – மூலக்கடை சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர், போலீசார் மணமக்கள் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு இருதரப்பும் கலைந்து சென்றனர்.