இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் மதிப்பிலான பட்டாசு, மாத்திரைகள், புளி பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் அவ்வப்போது கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார், உளவுப்பிரிவு போலீசார் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அவ்வப்போது கடத்தல்காரர்கள் பிடிபட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இனிகோநகர் அருகே காட்டுப்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சில மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக போலீசார் இனிகோநகர் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு சுமார் 70 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து போலீசார் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ புளி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதன் இலங்கை மதிப்பு ரூ.70 லட்சம் என்ற கூறப்படுகிறது.
மேலும் 10 மூட்டைகளில் பட்டாசு மற்றும் மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து உரிய விசாரணைக்கு பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.