திமுக பேரைச் சொல்லி.... சென்னை அரசு பள்ளியில் சாதி கொடுமை.. அடாவடி செய்த ஆசிரியை!
சென்னை அரசு பள்ளியில் திமுக பிரமுகரின் பெயரைச் சொல்லி, சாதிக் கொடுமையில் ஆசிரியரே ஈடுபட்டு வருவதாக மாணவர்கள் புலம்புகின்றனர்.
சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில், மேம்பாலம் தாண்டியதுமே டிரஸ்ட்புரத்தில் அமைந்திருக்கிறது பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல் நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்கள் மீது 3 ஆசிரியர்கள் தீண்டாமைக் கொடுமையில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவரை, ஆசிரியர்கள் அவரது சாதியைச் சொல்லி திட்டியும், மாணவரின் குடும்பத்தை இழிவாக பேசியும் துன்புறுத்தி வந்துள்ளனர்.
அந்த மாணவரை அழைத்து வகுப்பறையைக் கூட்டிப் பெருக்கச் சொல்லியும், கழிப்பறையை சுத்தம் செய்யச் சொல்லியும் கொடுமை செய்துள்ளனர். அண்மையில் பள்ளியில் நடந்த கலை நிகழ்ச்சியில் அந்த மாணவன் பறை அடித்ததைப் பார்த்த ஆசிரியர் சீனிவாசன் மற்றும் மீனாட்சி ஆகிய இருவரும், “நல்லாதான் பறை அடிக்கிற. நீயும் உங்க அப்பா மாதிரி வேலை பார்க்கலாமெனக்” கூறி உள்ளனர். இதனால் அந்த மாணவன் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி, இது குறித்து வீட்டில் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட மாணவனின் மாமா பள்ளிக்குச் சென்று இது குறித்து அந்த ஆசிரியர் சீனிவாசனிடமும், ஆசிரியை மீனாட்சியிடமும் கேட்ட போது இருவரும் திமிராகப் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் பள்ளிக்கு செல்வதற்கே பயப்படும் சூழலில் மாணவனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினரும், சமூக சீர்த்திருத்தவாதி இரட்டை மலை சீனிவாசனின் பேத்தியுமான ரேவதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார்.
பள்ளியில் அராஜக போக்குடன் நடந்துக் கொண்டு, மாணவர்களிடம் தீண்டாமை கொடுமையில் ஈடுபட்டு வரும் ஆசிரியை மீனாட்சி, “ நான் சபாநாயகர் அப்பாவுவின் தனிச் செயலாளரின் மனைவி” என்றுக் கூறி மிரட்டியதாகவும் காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரேவதி, "மீனாட்சி என்ற ஆசிரியை, மாணவர்களைச் சாதியைச் சொல்லி அநாகரீகமாகப் பேசுவதுடன், வகுப்பறையை சுத்தம் செய்யச் சொல்வது, கழிப்பறையில் தண்ணீர் அடைத்திருந்தால் சுத்தம் செய்யச் சொல்வது எனக் கொடுமைப்படுத்தி வருகிறார்" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய மாணவரின் தந்தை லோகநாதன், "எனது மகன் உட்பட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 4 மாணவர்களை தரையில் உட்கார வைத்து பாகுபாடு காட்டி உள்ளனர். எனது மகன் வகுப்பறையை கூட்டிப் பெருக்க மாட்டேன் எனக் கூறியதும், அந்த ஆசிரியைக்கு வெறுப்பு ஏற்பட்டு சாதி ரீதியாக கொடுமை செய்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையிலேயே அரசு பள்ளியில் இந்த அவலம் நடந்து வருவதால், பிற மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் நடைபெறும் அட்டூழியங்கள் எந்த அளவில் இருக்கிறதோ? என்று மாணவர்களின் பெற்றோர்கள் புலம்புகின்றனர். அரசு பள்ளிகளின் காவலராக காட்டிக் கொள்ளும் அமைச்சர் அன்பில் மகேஷ் இது குறித்தெல்லாம் கவலைப்பட மாட்டாரா?
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!