ஆருத்ரா தரிசனம்... கடலூர், திருச்சி மாவட்டங்களில் ஜன. 13ம் தேதி உள்ளூர் விடுமுறை!
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சி தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக திருச்சி மாவட்டத்திலும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பொதுமக்கள் கலந்து கொள்ள வசதியாக ஜனவரி 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரதன்று சேந்தனார் வீட்டுக்கு சிவன் பெருமான் களி உண்ண சென்ற தினத்தை ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
சிவாலயங்களில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 13ம் தேதியன்று ஆருத்ரா தரிசனம் நடக்கும் நிலையில், அன்றைய தினம் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த தினமான ஜனவரி 14ம் தேதி தைப் பொங்கல் விழா என்பதால், கடலூர் மாவட்டத்திலும், திருச்சி மாவட்டத்திலும் பொங்கலுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை தினங்களாக அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமையன்று முழு வேலை நாளாக செயல்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்