இன்றுடன் மண்டல பூஜை நிறைவு.. ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிப்பு... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் மண்டல காலத்துக்கான வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் சிகர நிகழ்வாக இன்று டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இன்று சபரிமலை ஐயப்பனுக்கு 420 பவுன் கொண்ட தங்க அங்கி அணிவித்து வழிபாடு நடைபெற உள்ளது.
ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலின் காப்பறையில் இருந்து தங்கஅங்கி கடந்த டிசம்பர் 22ம் தேதி ஊர்வலமாக கிளம்பியது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். நேற்று டிசம்பர் 25-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு ரதம் பம்பையை வந்தடைந்தது. அதன் பின்னர் தலைச்சுமையாக மாலை 3 மணிக்கு ஆபரணப் பெட்டி சந்திதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சரம்குத்தி பகுதியில் மாலை 5.15 மணிக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோர் தங்க அங்கி ஆபரணப் பெட்டியை வரவேற்றார். பின்னர் 18ம் படி வழியே ஆபரணப்பெட்டி கொண்டு செல்லப்பட்டு, அங்கு தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன்ராஜீவரு, சபரிமலை, மாளிகைப்புரத்தம்மன் கோயில் மேல்சாந்திகள் அருண்குமார் நம்பூதரி, வாசுதேவன்நம்பூதரி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
தீபாராதனை வழிபாட்டுக்குப் பிறகு மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த கோலத்தில் ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். பின்பு இரவில் தங்க அணி காப்பறையில் பாதுகாக்கப்பட்டு இன்று டிசம்பர் 26ம் தேதி மதியம் 12 மணிக்கு தங்க அங்கி மீண்டும் அணிவிக்கப்படும். இன்றுடன் மண்டல பூஜை நிறைவு பெறுவதால் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!