நாளை நடைபெறும் மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம்.. ஏன் தெரியுமா?.. வெளியான முக்கிய தகவல்!
![மன்மோகன் சிங்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/152e15bbae3866c2fac5271f09eac667.jpg)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (டிச. 26) இரவு காலமானார். முதுமை மற்றும் இதய நோய் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. நேற்று இரவு வீட்டில் மன்மோகன் சிங் சுயநினைவை இழந்ததால், வீட்டிலேயே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து, நேற்றிரவு 8:06 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்ட அவர், இரவு 9:11 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதையடுத்து மன்மோகன் சிங்கின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அவரது உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங்கின் இறுதி சடங்குகள் நாளை (டிச. 28) நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் ஜனவரி 1ம் தேதி வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.இதனால் திட்டமிட்ட அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும், மற்ற அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது எனவும் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களிலும் இந்திய தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பிற்கும், அவர் வகித்த பதவியின் கண்ணியத்திற்கும் அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிச் சடங்கின் போது சிறப்பு அரசு நெறிமுறை பின்பற்றப்படும். உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன், அவர் இந்திய தேசியக் கொடியான மூவர்ணக் கொடியால் போர்த்தப்படுவார்.
மேலும், இறுதிச் சடங்கின் போது அவருக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி நடத்தப்படும். இது மிக உயர்ந்த அரச கௌரவத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. முன்னாள் பிரதமரின் இறுதி ஊர்வலத்தின் போது கடுமையான பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் பின்பற்றப்படும். அவரது இறுதி பயணத்தில் பொதுமக்கள் முதல் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பங்கேற்பார்கள். இது தவிர, இராணுவ இசைக்குழுக்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்களும் இறுதி ஊர்வலம் மற்றும் அணிவகுப்புகளில் பங்கேற்பார்கள்.
முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் உடல்கள் டெல்லி ராஜ்காட் வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும் மன்மோகன் சிங்கின் உடலையும் இங்கு தகனம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் பல முன்னாள் பிரதமர்களுக்கு தனி சமாதி கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இறுதிச் சடங்குகள் செய்யும் முறை இறந்தவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் இருக்கும்.
வழக்கமாக முன்னாள் பிரதமர்களின் இறுதிச் சடங்குகள் டெல்லியில் நடைபெறும். ஆனால் பல சந்தர்ப்பங்களில், அவர்கள் சம்பந்தப்பட்ட நபரின் சொந்த மாநிலத்திலும் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் நாட்டின் முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
மன்மோகன் சிங்கின் உடல் நாளை (டிச. 28) காலை 8 மணிக்கு மோதிலால் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காங்கிரஸ் தலைமையகத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், அங்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தலாம் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் இருந்து மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் காலை 9.30 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங்கின் மூன்று மகள்களில் ஒருவர் அமெரிக்காவில் உள்ளார். இன்று இரவு அவர் டெல்லி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அவர் வந்த பிறகு, மன்மோகன் சிங்கின் உடல் நாளை காலை இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் செல்லப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!