பைக் மீது டிராக்டர் மோதி ஒருவர் பலி... கர்ப்பிணி பெண் படுகாயம்!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் மாமனார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கர்ப்பிணி மருமகள் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள திருமங்களக்குறிச்சி தெற்கு தெருவில் வசித்து வந்தவர் வெங்கடாசலம்(60). இவர், கயத்தாறு-கழுகுமலை ரோடு ஓரத்தில் மோட்டார் வாகனங்களுக்கான பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு சிவன்பெருமாள், செந்தில்குமார் ஆகிய 2 மகன்களும், சுடலைவடிவு, மாதவி என்ற 2 மகள்களும் உள்ளனர்.

இதில் விவசாயியான சிவன்பெருமாள் மனைவி சரோஜினி (27). இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சரோஜினி மாமனாரை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக மொபட்டில் பஞ்சர் கடைக்கு சென்றார். பின்னர் கடையை பூட்டிவிட்டு வெங்கடாசலம் மருமகளுடன் மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மொபட்டை சரோஜினி ஓட்டிச்செல்ல வெங்கடாசலம் பின்னால் அமர்ந்து சென்றார்.
கயத்தாறு-கழுகுமலை ரோட்டில் இருந்து திருமங்களக்குறிச்சி பிரிவு சந்திப்பு ரோட்டை கடப்பதற்கு முயன்றபோது வாகனங்கள் சென்றதால், மொபட்டை நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வந்த டிராக்டர் திடீரென மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு 2பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே வெங்கடாசலம் பரிதாபமாக இறந்து போனார். சரோஜினி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
