சபரிமலையில் 3.4 லட்சம் மரங்களை வெட்டிவிட்டு, ‘பசுமை விமான நிலையம்’ அமைக்க முடிவு!
சபரிமலையில் 3.4 லட்சம் மரங்களை வெட்டி விட்டு, அந்த பகுதியில் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கார்த்திகை மாதங்களிலும், மகர ஜோதி சமயங்களிலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி என மூன்று மாதங்களிலுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதிக போக்குவரத்து மற்றும் வாகன நெரிசல் காரணமாக, சாலை வழித்தடங்கள் பொதுவாக பல்வேறு நேரங்களில் மாற்றப்படுகின்றன. இந்த நெரிசலை குறைக்க மாற்று போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துக்கு தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், சபரிமலையில் பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 2569 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கோட்டயம் மாவட்ட நிர்வாகம் கேரள அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் மணிமலை, எரிமேலி (தெற்கு) பகுதிகளில் மட்டும் 1039 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலையம் அமைப்பதால் புதிய வேலை வாய்ப்பு கிடைத்தாலும், அங்குள்ள 347 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும். அவர்களில் 238 பேர் அருகிலுள்ள எஸ்டேட்டில் வேலை செய்து வருகிறார்கள்.
விமான நிலைய கட்டுமானத்திற்காக வெட்டப்பட உள்ள 3.4 லட்சம் மரங்களில் 3.3 லட்சம் மரங்கள் ரப்பர் மரங்கள், 2492 தேக்கு மரங்கள், 2247 காட்டு பனை மரங்கள், 828 மஹோகனி மரங்கள், 1131 பொதுவான பனை மரங்கள், 184 மாமரங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சில வழிபாட்டுத் தலங்களையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கெல்லாம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோட்டயம் மாவட்ட நிர்வாகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!