குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் மழைநீர்... நாற்று நட்டு பெண்கள் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரில் கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தியதால் பரபப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட இனாம் மணியாச்சி கண்மாய் பகுதி மற்றும் ஜெயம் நகர் பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் போதிய வாறுகால் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி என எவ்வித வசதிகளும் இல்லை. மேலும் அருகில் உள்ள கண்மாய் கரை உயர்த்தப்படாமலும், மறுகரையில் நீர்வரத்து வடிகால் இல்லாத சூழ்நிலை இருப்பதால் ஒவ்வொரு மழையின் போதும் கண்மாய் முழுவதுமாக நிரம்பி, தண்ணீர் கண்மாய் கரையை கடந்து, அருகில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்துவிடுகிறது.
மேலும் தெருக்கள் முழுவதும் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இது குறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பெய்த மழையில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது மட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள தெருக்கள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் தெருக்கள் முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அந்த தெருக்களில் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை, ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி 20க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும், வாறுகால் வசதி, சாலை வசதி மற்றும் மின் விளக்கு வசதி செய்ய வேண்டும்,, கண்மாய் கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை உயர்த்தி, தடுப்புச் சுவர் அமைப்பது மட்டுமின்றி நீர் வரத்து வாறுகாலுடன் சாலை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தேங்கியுள்ள தண்ணீரில் குலவையிட்டு நாற்று நட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், உதவி ஆய்வாளர்கள் வேல் பாண்டி , அருள்மொழி மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
கண்மாய் கரையின் பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அந்தப் பணிகள் தொடங்கும் என்றும், கண்மாய் கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வரத்து வாறுகாலுடன் சாலை அமைக்கப்படும் மற்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வாறுகால் அமைக்கப்படும், தற்காலிகமாக மழைநீர் தேங்கி நிற்கும் பகுதியில் சரள் மண் அடிக்கடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!