திரைப்பட இயக்குநர் சொர்ணத்தின் மறைவிற்கு தமிழக முதல்வர் இரங்கல்!

 
திரைப்பட இயக்குநர் சொர்ணத்தின் மறைவிற்கு தமிழக முதல்வர் இரங்கல்!


திரைப்பட இயக்குநராக சொர்ணம் அவர்களின் மறைவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான சொர்ணம் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

திரைப்பட இயக்குநர் சொர்ணத்தின் மறைவிற்கு தமிழக முதல்வர் இரங்கல்!

முரசொலியில் ஆரம்ப கால துணையாசிரியராக இருந்து “பிறை வானம்” என்ற தொடரை முரசொலியில் எழுதியவர். மாணவப் பருவத்திலேயே கலைஞர் அவர்களால் கூர்மைப்படுத்தப்பட்ட சொர்ணம், சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் அடங்கிய “விடைகொடு தாயே” என்ற புரட்சிகர நாடகத்தின் மூலம் கழகத்தின் கொள்கைகளை பட்டிதொட்டிக்கெல்லாம் கொண்டு சென்றவர். கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய இந்த நாடகம் கழக மாநாடுகளில் நடத்தப்பட்டது.


எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் 17 படங்களுக்கு உரையாடல் தீட்டிய அவர், முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய “ஒரே ரத்தம்” எனும் திரைப்படம் உட்பட பல படங்களை இயக்கியவர்.“இளைய சூரியன்” வார ஏட்டின் பொறுப்பாசிரியராகவும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிக் கல்லூரித் தலைவர், தமிழ்நாடு திரைப்படப் பிரிவுத் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றிவர். கலை இலக்கியப் பணிக்கு பெருமை சேர்த்தவர்.

முரசொலியில் ஞாயிறு தோறும் வெளிவந்த “புதையல்” இதழின் முழுப் பொறுப்பையும் ஏற்று – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்தோவியங்களை கருத்துக் கருவூலமாக்கியவர். கலைஞர் விருதால் கெளரவப்படுத்தப் பட்டவர். எழுத்தாளர், இயக்குநர், வசனகர்த்தா, பத்திரிகையாளர் என்று பன்முகத் திறமையாளராகத் திகழ்ந்த திரு. சொர்ணம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

From around the web