வண்டலூா் சிங்கம் 2 நாட்களுக்குப் பிறகு கூண்டுக்கு திரும்பியது!
சென்னை வண்டலூா் பூங்காவில் சஃபாரி பகுதியிலிருந்து மாயமானதாக கூறப்பட்ட சிங்கம், இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று தனது கூண்டுக்கு திரும்பியது.
சென்னை வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன. இதில் 3 ஆண், 4 பெண் என 7 சிங்கங்கள் 25 ஏக்கா் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள 'லயன் சஃபாரி' பகுதியில் விடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இங்கு, கூண்டு பொருத்தப்பட்ட வாகனத்தில் பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டு, இயற்கைச் சூழலில் உலவும் சிங்கங்களைப் பாா்க்க அனுமதிக்கப்படுகின்றனா்.

இதனிடையே, பெங்களூரு பன்னா்கட்டா உயிரியல் பூங்காவுடன் விலங்கு பரிமாற்றத் திட்டம் மூலம் 2023ம் ஆண்டு 'ஷெரியாா்' என்ற 5 வயது ஆண் சிங்கம் வண்டலூா் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிங்கம் 'சஃபாரி' பகுதியில் விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்.3ம் தேதி அந்த சிங்கம் அதன் தங்குமிடத்துக்கு திரும்பவில்லை. இதனால், மீட்புக் குழுவினா் 'ஷெரியாா்' சிங்கத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். இதையடுத்து சிங்கம் 'சஃபாரி' பகுதிக்குள் இருப்பதை அவா்கள் உறுதிப்படுத்தினா். தொடா்ந்து இரு நாட்களாக உணவு எடுக்க வராமல், 'சஃபாரி' பகுதியில் மறைவாக இருந்த சிங்கம் நேற்று மீண்டும் கூண்டுக்குத் திரும்பியது. இது போன்று புதிய இடங்களில் விடப்படும் சிங்கங்கள் தங்களது சுற்றுச்சூழலை அலைந்து திரிந்து ஆராய்வது இயல்பான ஒன்று தான் என வண்டலூா் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
