இந்தியா-இலங்கை 20 ஓவர் தொடர்: முதலாவது 20 ஓவர் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது

 
இந்தியா-இலங்கை 20 ஓவர் தொடர்: முதலாவது 20 ஓவர் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது

இந்தியா-இலங்கை இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித்தொடர் ஜூலை 13ம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பில் தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது.

இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) 8 மணிக்கு நடைபெறுகிறது.

20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் இது என்பதால் வீரர்களின் செயல்பாடு முக்கியத்துவம் பெறும். இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 19 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் இதில் 13-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு தெரியவில்லை.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

From around the web