நாளை முதல் தீவுத் திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்!! களைகட்டும் தீபாவளி!!
தமிழகம் முழுவதும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தடுப்பு முறைகள், ஊரடங்கு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நடப்பாண்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் இப்போதிருந்தே ஷாப்பிங், புத்தாடை , பட்டாசு என களை கட்டத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னை தீவுத்திடலில் நாளை அக்டோபர் 17 ம் தேதி முதல் பட்டாசு விற்பனை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக தீவுத்திடலில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி , தீவுத்திடலில் 55 பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டரை சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகளில் வியாபாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கடையும் 3மீ இடைவெளியில் 250 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. பட்டாசு கடைகளுக்கு அருகே அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான மக்கள் பட்டாசு வாங்க ஆர்வமுடன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் லாரிகள், விபத்து தடுப்புக் குழுக்கள், அனைத்து கடைகளுக்கும் காப்பீடு, ஆம்புலன்ஸ் வசதி போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பொதுமக்கள் அவசரமாக வெளியேற தனிப்பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் தீபாவளி பண்டிகைக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே போல் தீபாவளி திருநாளில் தீ விபத்து மற்றும் பட்டாசுகளால் விபத்து ஏற்பட்டால் 24 மணி நேரமும் செயல்படும் தீயணைப்பு துறை மருத்துவ ஆம்புலன்சுக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தீயணைப்பு துறைக்கு 112 மற்றும் மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்: 108 ஐ உபயோகிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகைக்கு மக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மீறுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!