ராஜினாமா செய்த 4 நாட்களில் பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டியன் மீண்டும் நியமனம்!
ராஜினாமா செய்த 4 நாட்களில் பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டியன் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.பிரான்சில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு இவர் நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் நிலவியது. இதனால் கடந்த ஒரு ஆண்டில் அடுத்தடுத்து 4 பிரதமர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதற்கிடையே பட்ஜெட்டில் பொது சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்கு நிதி குறைக்கப்பட்டதாக கூறி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த சூழலில் அரசியல் நிலைத்தன்மையை கொண்டு வர முன்னாள் ராணுவ மந்திரியான செபாஸ்டியன் லெகோர்னு (39) பிரதமராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் அனைத்தையும் தடுப்போம் என்ற அமைப்பினர் சார்பில் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது. அப்போது பிரதமர் பதவி விலக கோரி தலைநகர் பாரீசில் அவர்கள் பேரணியாக சென்றனர்.தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பியதால் பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் செபாஸ்டியன் லெகோர்னு தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அவரை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளார். ராஜினாமா செய்தவரையே மீண்டும் பிரதமராக்கியதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
அதேசமயம் இந்த ஆண்டு இறுதிக்குள் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது. எனவே இன்று பட்ஜெட் வரைவு மசோதாவை தாக்கல் செய்ய பிரதமர் செபாஸ்டியனை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தி உள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் செபாஸ்டியனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து உள்ளன. இதில் பெரும்பான்மை பெற்றால் மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும். இல்லையெனில் பிரான்ஸ் அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கும் நிலை உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!