மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை... பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சியில் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி பெற்றோர்கள், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே கொங்காரய குறிச்சியிலுள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவியை, ஆசிரியரான சாத்தான்குளம் கருங்கடல் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த மணிகண்டன் (33) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த மாணவி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கொங்கராயக்குறிச்சியில் நேற்று பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பெற்றோருக்கு சரியான தகவல் தெரிவிக்காமல், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று காலையில் கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் இருந்து பெற்றோர், பொதுமக்கள் ஊர்வலமாக சென்று அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை தலைமையில் ஏராளமான போலீசார் அந்த பள்ளிக்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பள்ளியின் மெயின்கேட் பூட்டப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிக்குள் செல்ல முயன்ற பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் பள்ளிக்கூடத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்தினசங்கர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் பள்ளி நிர்வாகத்தினர், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், பொதுமக்கள் பிரதிநிதிகள், ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் மீது உடனடியாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தவறிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு பள்ளி நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அப்போது பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் மனுவை தாசில்தாரிடம் கொடுத்தனர். பின்னர் தாசில்தார் கூறுகையில், மாணவி பாலியல்வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் எவ்வித சமரசமும் இல்லாமல் ஆசிரியர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம் குறித்து பள்ளி கல்வித்துறை மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதிஅளித்தார். இதை ஏற்று கொண்டு பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!