”ஆளுநராக இருந்த நான் அக்காவாக திரும்பி வந்துள்ளேன்”... தமிழிசை உருக்கமான கடிதம்!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஜூரம். அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்து தீவிர களப்பணியாற்றி வருகின்றன. சமீபத்தில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் குதித்துள்ளார். தமிழிசை தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தமிழிசை தென்சென்னை மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்
”எனது அன்பிற்கினிய மக்களுக்கு வணக்கம்!
ஒரு ஆளுநராக முன் உதாரணமான பல சீரிய திட்டங்களை நான் செயல்படுத்தினேன். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில் நான் எடுத்த முயற்சியால் அந்த மாநில மக்கள் பயனடைந்தனர்.
தற்போது தேர்தல் காலம். களத்தில் எனது கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. மீண்டும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்தப் புகழ் தொடர வேண்டும். மீண்டும் திரு.நரேந்திர மோடி அவர்கள் பாரதப் பிரதமராக மூன்றாவது முறையாக அரிய அணையில் அமர வேண்டும். இதில் தொண்டர்களோடு தொண்டராக நானும் துணை நிற்க வேண்டும்.
களத்தில் நின்று இருந்து பணியாற்ற வேண்டும் என்ற சீரிய வீரிய சிந்தனையோடு நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். இந்திய மக்களுக்கு மீண்டும் ஒரு சிறப்பானதொரு ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி வழங்க வேண்டும். அதற்கு நானும் கட்சிப் பணியை சிறப்பாக ஆற்ற வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவி நான் துறந்தேன். நான் வாழுகின்ற தமிழ்நாட்டின் தென் சென்னை பகுதி மக்கள் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். அவர்களுக்கு ஒரு புதிய வளர்ச்சி அத்தியாயத்தை உருவாக்கித் தர வேண்டும்.
வாழ்வாதாரத்தை அமைத்து தர வேண்டும் என்ற காரணத்தினால் நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். தேசிய நீரோட்டத்தில் தென்சென்னையும் இணைந்து தொழில் வளர்ச்சியிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் வீறு நடை போட வேண்டும் என்ற சிந்தனையால் நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். எனது சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் தென்சென்னை மக்கள் எனக்கு பெரும் ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கையோடு களத்தில் நான் நிற்கின்றேன்....
ஆளுநராக இருந்த நான்... உங்கள் அக்காவாக திரும்பி வந்திருக்கின்றேன்.... விரும்பி வந்திருக்கின்றேன்.... வெற்றியை தாருங்கள்.... உங்களுக்கு பணி செய்ய காத்துக்கொண்டிருக்கின்றேன்" எனப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!