கொள்ளையடிக்க வந்தவனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்... ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பியது!

 
மணப்புரம்

கத்தியைக் காட்டி மிரட்டி, நகைகளைக் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மணப்புரம் தங்க நகைக் கடன் நிறுவனத்தில் அரங்கேறியுள்ளது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் மூலமாக சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் தப்பியது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பிரதான சாலையில் மணப்புரம் தங்க நகைக் கடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

நேற்று காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் வழக்கம் போல் நிறுவனத்தைத் திறந்துள்ளனர். அப்போது நிதி நிறுவன கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் இறங்கி வந்திருக்கிறார். தீடிரென அந்த இளைஞர் தனது கையில் வைத்திருந்த கத்தியை அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரின் கழுத்தில் வைத்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மணப்புரம்


தான் சொல்வதை அனைவரும் கேட்காவிட்டால், பெண் ஊழியரை கொலை செய்துவிடுவதாக அந்த இளைஞர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் கொண்டு வந்திருந்த பையில் இருந்து வயர்களை எடுத்து, ஒரு ஊழியரிடம் கொடுத்து மற்ற ஊழியர்கள் ஒவ்வொருவராக கைகளை கட்டுமாறு கூறியுள்ளார்.

இதன் பின்னர் அவர்களிடமிருந்து நிதி நிறுவனத்தின் சாவியை வாங்கி கதவை திறக்க முயற்சித்துள்ளார். அப்போது சாவியை மாற்றிப் போட்டதால் நிதி நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென ஒலிக்கத் துவங்கியது.
 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் அங்கிருந்தவர்களை விட்டுவிட்டு தப்பியோட முயற்சித்தார். ஆனால், சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் கையில் கட்டுடன் அந்த இளைஞரை விரட்ட தொடங்கினர். கையில் கட்டுடன் ஊழியர்கள் ஒரு இளைஞரை விரட்டுவதை கண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அந்த இளைஞர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதற்குள் கொள்ளையடிக்க தேவையான ஆயுதங்கள் இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ்
இது குறித்து தகவல் அறிந்து வந்த வத்தலகுண்டு போலீஸார் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு, தப்பியோட முயன்ற இளைஞரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். வத்தலக்குண்டு மணப்புரம் தங்க நகை கடன் நிறுவனத்தில் சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணம் இருந்ததாக தெரிவித்த அதன் ஊழியர்கள், “திருட வந்தவன் முயற்சி தோற்றுப் போனதால் பத்திரமாக அத்தனையும் தப்பியது” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web