ஒரகடம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி

 
ஒரகடம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் தாலுகா தென்கழனி கிராமத்தில் வசித்து வருபவர் அஜித்குமார். இவருக்கு வயது 24. இவர் தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் பகுதியில் உள்ள தனது சித்தியின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். வாலாஜாபாத்- வண்டலூர் சாலை மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தார்.

ஒரகடம் வனப்பகுதி அருகே சாலை வளைவில் எதிர் திசையில் தனியார் பேருந்து ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. ஓரமாக செல்லலாம் என நினைப்பதற்குள் அதி வேகமாக பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுனரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web