நடிகர் மாரிமுத்துவின் கடைசி வீடியோ.. சீரியல் நடிகை உருக்கம்!

 
குணசேகரன்

சிலரது இறப்பு சரித்திரத்தில் இடம் பெறுகிறது. தூங்குவதைப் போல சாக்காடு என்பார்கள். இறக்க போகும் கடைசி மணி துளி வரையிலும், தான் நேசித்த நடிப்புக்கான பங்களிப்பை செய்திருந்தார் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியலுக்கான டப்பிங் பணியின் போது, திடீரென நெஞ்சு வலிக்க, யாரையும் தொந்தரவு செய்யாமல், தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். மாரடைப்பால் நடிகர் மாரிமுத்து மரணமடைந்தது சின்னத்திரை ரசிகர்களையும் தாண்டி, தமிழகம் முழுவதும் சோகம் சூழ செய்திருந்தது.

இந்நிலையில், எதிர்நீச்சல் நடிகை மோனிஷா விஜய், நடிகர் மாரிமுத்து இறப்பதற்கு முன்பு தன்னைப் பற்றி பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, நெகிழ்ந்திருக்கிறார். நடிகை மோனிஷாவின் சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்கு பதிலாக, நடிகை மோனிஷாவிடம் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ஆசிர்வதித்திருக்கிறார் நடிகர் மாரிமுத்து.  விஷயம் தெரிந்து, பரவாயில்லைம்மா.. இந்த வீடியோவை பத்திரமா உன் பொறந்தநாளுக்கு வெச்சுக்கோ என்று கூறியிருக்கிறார்.

தேனி மாவட்டம் வருஷநாடு பகுதி பசுமலை கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் மாரிமுத்து. திரைத்துறையில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த நடிகர் மாரிமுத்து, கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.  ராஜ்கிரணிடம் அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா, ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார். 2011-ல் யுத்தம் செய் படத்தில் மாரிமுத்துவை நடிகராக அறிமுகம் செய்தார் இயக்குநர் மிஷ்கின். வாலி, உதயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார். தற்போது வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார்.

நடிகர் மாரிமுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்டார். சீரிய பகுத்தறிவாதியாக திகழ்ந்து டிவி விவாதங்களிலும் அதனை முழுமையாக வலியுறுத்தி பேசிவந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் காலை டிவி தொடருக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது நடிகர் மாரிமுத்துவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Marimuthu

இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்த போது அவருக்கு மகளாக நடித்த மோனிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய வீடியோவை மோனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மாரிமுத்து இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மோனிஷாவின் பிறந்தநாள் வருவதற்கு முன்பே அவருக்காக மாரிமுத்து வீடியோ அனுப்பி இருப்பதாக மோனிஷா கூறியிருக்கிறார்.

அதில் மாரிமுத்து பேசுகையில், மோனிஷா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். என்னால் உன்னுடைய பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து சொல்ல முடியவில்லை. மோனிஷா நீ ரொம்ப திறமையான பொண்ணு. அதனாலதான் இந்த வீடியோ அனுப்புறேன். மோனிஷா, நீ எனக்கு சீரியலில் மகளாக நடித்துக் கொண்டிருக்கிறாய். ஆனால் நிஜத்தில் நீ எனக்கு மகளாக பிறக்கவில்லையே என்று பல நாட்கள் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு விதத்தில் பொறாமைப்பட்டேன் என்றும் கூட சொல்லலாம்.

ஏனென்றால், உனக்கு அவ்வளவு திறமை இருக்கிறது. நீ நன்றாக படிக்கக்கூடிய பொண்ணு. விளையாட்டிலும் வேற லெவலில் கலக்கிக் கொண்டிருக்கிறதா. உனக்கு எத்தனை கலைகள் தெரியும் என்று நீ ஒவ்வொரு நாளும் சொல்லும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. நீயும் உன்னுடைய அக்கா வர்ஷாவும், எத்தனையோ விளையாட்டுகளில் கலந்து கொள்ளுறீங்க. எல்லா திறமையும் உள்ள முழு நிறைவான ஒரு பெண்ணா நான் உன்னை பார்க்கிறேன்.

உன்னுடைய வாழ்க்கையில் நீ பெரிய அளவில் வரவேண்டும். பி.டி உஷா, கல்பனா சாவ்லா மாதிரி, இந்தியாவிலிருந்து எத்தனை பெண்கள் சாதித்து இருக்காங்களோ, அந்த மாதிரி நீயும் சாதிக்கப் போறது எனக்கு தெரியும். அது நீ நடிகையா சாதிக்க போறியா? இல்ல விளையாட்டு வீராங்கனையா சாதிக்க போறியா? இல்ல அதை தாண்டி மூன்றாவதாக வேற ஏதாவது திறமையில் சாதிக்க போறியா என்று எனக்கு தெரியல.

மோனிஷா நீ ஆல் இந்தியா லெவலில் பல பதக்கங்களை பெற்றிருக்கா. இன்னும் அதிகமாக நீ வெற்றி பெறுவ. அதுவும் சமீப காலமாக ஆறு ஏழு எபிசோடுகளாக எதிர்நீச்சல் சீரியலில் பின்னி பெடல் எடுத்துட்ட. அது சம்பந்தமாக உன்கிட்ட பேசி இருக்கேன். வாழ்த்துக்கள் மோனிஷா. என்னுடைய ஆசிர்வாதங்கள் உனக்கு எப்பவும் உண்டு. இவ்வாறு மறைந்த நடிகர் மாரிமுத்து அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web