5 நாட்களில் 10,000 பேர் மருத்துவமனைகளில் அனுமதி; 41 பேர் உயிரிழப்பு... கேரளாவில் வைரஸ் தாக்குதலால் அலறும் மக்கள்!

 
வைரஸ் கேரளா மருத்துவமனை வைரஸ் கேரளா மருத்துவமனை

அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது மர்மத் தொற்றுநோய்கள் மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்களும் மரண பயத்தில் உறைந்து போயுள்ளனர். 

கேரளாவில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் விட்டுவிட்டுப் பெய்யும் மழையும், திடீர் பருவநிலை மாற்றமும் நச்சுயிரிகள் மற்றும் கொசுக்கள் பெருகுவதற்குப் பெரும் சாதகமாக அமைந்துவிட்டன. இதன் விளைவாக, கடந்த 13 நாட்களில் மட்டும் பல்வேறு விதமான மர்மத் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த 5 நாட்களில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் கடுமையான காய்ச்சல் பாதிப்பு காரணமாகப் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக, மனிதர்களின் குடலைத் தாக்கி ரத்தப்போக்கை ஏற்படுத்தும் 'ஷிகெல்லா' பாக்டீரியா தொற்று மற்றும் மூளையைத் தாக்கி உயிருக்கு உலை வைக்கும் ஆபத்தான கொடிய 'நிபா வைரஸ்' பரவல் கேரளாவில் அதிவேகமாகத் தீவிரமடைந்துள்ளது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் தங்களுக்கு லேசான காய்ச்சல் அறிகுறி தெரிந்தாலும் உடனடியாக மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

இந்த தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தவும், மேலும் உயிர்ச்சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் கேரள மாநிலச் சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் தீவிர தடுப்பு மற்றும் மருத்துவ முகாம் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.