ஒரே நேரத்தில் 12 கவுன்சிலர்கள் ராஜினாமா!! பரபரக்கும் கலெக்டர் அலுவலகம்!!
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம் சிக்கல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 9 கிராமங்கள் அமைந்துள்ளன. அதன்படி சிக்கல், ஆண்டிச்சிகுளம், டொட்டப்பல்சேரி, தொட்டியாப்பட்டி, கழநீர் மங்கலம், மதினார் நகர், இ.சி.ஆர் காலனி உட்பட 9 கிராமங்களில் 12 வார்டுகளில் சுமார் 13000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக காவிரி கூட்டுக்குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை.
கிராமத்திற்கு காவிரி குடிநீர் வசதி கோரி உரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ.10 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். வீட்டு உபயோகத்திற்கு இங்குள்ள குளத்து நீரை பயன்படுத்தி வந்த நிலையில் கோடைக்காலத்தில் அதுவும் வற்றிவிடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதன் அடிப்படையில் கிராமத்திற்கு நிரந்தர குடிநீர் வசதி கேட்டு, கலெக்டரின் மனு கொடுத்தனர். அதே சமயத்தில் ஊராட்சியின் 12 வார்டு கவுன்சிலர்கள், துணைத்தலைவர் நூருல் அமீன் தலைமையில் ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டரிடம் ஒட்டுமொத்தமாக தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் பரக்கத் ஆயிஷா ''சிக்கல் பஞ்சாயத்தில் 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஒரு புதிய தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக காவிரி கூட்டு குடிநீர் வராததால் இதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உள்ளூர் நீர் ஆதாரங்களும் உப்புத்தன்மையுடன், வறட்சி தன்மை அடைந்துவிட்டது '' என்றார். குடிநீர் வசதி கேட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதம் அளித்திருப்பது இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?