'ஜனநாயகன்' படத்தை 1.20 கோடி பேர் சட்டவிரோதமாகப் பார்த்ததாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்!

 
ஜனநாயகன்

மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெறுவதற்கு முன்பாகவே, இணையதளங்களில் முழுமையாகக் கசிந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தை, இதுவரை சுமார் 1.20 கோடிக்கும் அதிகமான மக்கள் சட்டவிரோதமாகப் பார்த்துள்ளதாகத் தமிழகக் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் காட்சிகள் மற்றும் முழுப் படமும் கூகுள் டிரைவ் மற்றும் தமிழ் ராக்கர்ஸ்போன்ற சட்டவிரோத இணையதளங்களில் கசிந்த விவகாரத்தில், சைபர் கிரைம் போலீசாரால் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஜினி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்கள் இன்று நீதிபதி சி. குமரப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

ஜனநாயகன்

"முதன்மை குற்றவாளியும் அவனது சகோதரர்களும் இணைந்து, எடிட்டிங் அறையில் இருந்து திருடப்பட்ட துண்டுத் துண்டான காட்சிகளை ஒன்றாக இணைத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகள் இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். நிதிப் பரிமாற்றங்கள் குறித்த விசாரணையும், இறுதி அறிக்கை தயாரிக்கும் பணிகளும் இன்னும் முழுமையடையவில்லை. இந்தச் சூழலில் இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், அவர்கள் சாட்சியங்களை முழுமையாகக் கலைக்க வாய்ப்புள்ளது" என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்த கடுமையான குற்றச்சாட்டுகளையும், படத்தின் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கின் தீவிரத்தையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட இருவரின் ஜாமீன் மனுக்களையும் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஜனநாயகன்  

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக உருவாகியுள்ள 'ஜனநாயகன்', சுமார் ₹300 கோடி முதல் ₹500 கோடி வரையிலான பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தணிக்கை வாரியத்தில் நிலவி வந்த சில நிர்வாகத் தாமதங்களால் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி தள்ளிப்போன சூழலில், இந்த சட்டவிரோத இணையதளக் கசிவும், 1.20 கோடி பேர் படத்தைப் பார்த்துள்ளதாகக் காவல்துறை தந்துள்ள அதிகாரப்பூர்வத் தகவலும் ஒட்டுமொத்தத் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.