130 சவரன் நகை கொள்ளை.. ஐடி தம்பதி புகாரும்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான ட்விஸ்டும் !!
சென்னையில் எம்ஜிஆர் நகர் பகுதியில் சரவணன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். சரவணன் ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவியும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.. இவர்கள் சமீபத்தில் போலீசாரிடம் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது தங்கள் வீட்டில் இருந்த 130 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளித்தனர்.
நள்ளிரவில் கொள்ளையர்கள் வந்து நகைகளைத் திருடிச் சென்றதாகவும் அதனை மீட்டுதரவும் கோரிக்கை வைத்தனர். 130 சவரன் என்பதால் உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். உடனடியாக சம்பவ இடத்திற்குக் கைரேகை வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டன.
போலீசார் வீடு முழுக்க தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த பீரோ ஒன்றையும் அவர்கள் திறந்து சோதனை செய்த போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் கொள்ளையடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட 130 சவரன் நகைகளும் பீரோவில் பத்திரமாக இருந்தது. இதனால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து ஐடி தம்பதியிடம் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது அவர்கள் சொன்ன தகவலைக் கேட்டு போலீசார் உண்மையில் கோபம் அடைந்திருப்பர். எப்போதும் அவர் தனி ரூமிலும், அவரது மனைவியும் குழந்தைகளும் தனி ரூமிலும் தான் தூங்குவார்களாம்.
அன்றைய தினம் நள்ளிரவில் 12.30 மணியளவில் சமையலறையில் இருந்து பாத்திரங்கள் வரிசையாக விழுந்துள்ளது..ஆனால் மறுநாள் காலையில் பீரோவும் திறந்து கிடந்துள்ளது. இதனால், நள்ளிரவில் திருடர்கள் தான் திருட வந்தார்கள் என்று நினைத்துவிட்டார். இந்த பதற்றத்திலேயே பீரோவையும் தேடியதால் அவரால் நகையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறினர்.
பின்னர் போலீசார் ஆய்வில், அங்கிருந்த எலி காரணமாகப் பத்திரங்கள் உருண்டு விழுந்தது தெரியவந்தது. அதை இந்த ஐடி தம்பதி கொள்ளையர்கள் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். காலையில் பீரோவும் திறந்திருக்க எல்லாமே குழப்பத்தில் முடிந்துள்ளது. இதனையடுத்து ஐடி தம்பதிக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டு போலீசார் திரும்பிச்சென்றனர்.