நாளை முதல் டெல்லியில் 1 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு!

 
144

நாளை முதல், டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலங்களில் டெல்லியில், குறிப்பாக டெல்லியின் வடக்கு பகுதியில் கூட்டங்களுக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.
நாளை முதல் ஒரு மாதத்துக்கு ஹரியாணா விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி, போராட்டம் நடத்த உள்ளனர். இதில், 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரியானா விவசாயிகள்
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், நாளை (பிப்.13) தொடங்கி மார்ச் 12 ம் தேதி வரை டெல்லி முழுவதும் பெரிய கூட்டங்கள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா பிறப்பித்த உத்தரவில், "தேசிய தலைநகருக்குள் டிராக்டர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிகள், எரியக்கூடிய பொருட்கள், செங்கற்கள் மற்றும் கற்கள் போன்ற தற்காலிக ஆயுதங்கள், பெட்ரோல் கேன்கள், சோடா பாட்டில்களை சேகரிப்பதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போராட்டம்

ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி - ஹரியாணா எல்லையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் ஏராளமான பேரிகார்டுகள், முள்வேலிகள், சிமெண்ட் தடுப்புகள் என பல்வேறு ஏற்பாடுகளை டெல்லி மற்றும் ஹரியாணா காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

From around the web