1800 பேர்... 360 டன் எடைகொண்ட கோட்டையைக் கயிறு கட்டி நகர்த்தி சாதனை - வைரலாகும் வீடியோ!
ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற ஹிரோசாகி நகரில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான 'ஹிரோசாகி கோட்டையை', 'ஹிக்கியா' என்ற பாரம்பரிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சுமார் 1,800 பொதுமக்கள் ஒன்றிணைந்து கயிற்றால் கட்டி 2.22 மீட்டர் தூரம் வெற்றிகரமாக நகர்த்தியுள்ளனர்.
கட்டிடங்களை இடிக்காமல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தும் ஜப்பானிய பாரம்பரியக் கலையான 'ஹிக்கியா' உத்தியைப் பயன்படுத்தி இந்த 360 டன் எடையுள்ள 3 அடுக்குக் கோபுரம் நகர்த்தப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பெரியவர்கள் என சுமார் 1,800 பொதுமக்கள் கலந்துகொண்டு, கோட்டையில் கட்டப்பட்டிருந்த தடிமனான கயிறுகளை இழுத்துச் சீராக நகர்த்தினர். கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தக் கோட்டையின் அடிப்பகுதியில் இருந்த கற்கள் மற்றும் சுவர்களைப் பலப்படுத்தும் சீரமைப்புப் பணிகளுக்காகக் கோட்டை சிறிது தூரம் தள்ளி நகர்த்தப்பட்டிருந்தது. தற்போது சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததால், மீண்டும் அதனைப் பழைய இடத்திலேயே நிலைநிறுத்தும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக தற்போது 2.22 மீட்டர் தூரம் நகர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் மீதமுள்ள தூரத்தையும் வெற்றிகரமாக நகர்த்தி, கோட்டையை அதன் பழமையான அஸ்திவாரத்திலேயே முழுமையாக நிலைநிறுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
