உறவினர் வீட்டில் 19 வயது இளம்பெண் சடலமாக மீட்பு - உடலில் காயங்கள், ரத்தக் கறைகளால் பரபரப்பு!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உறவினர் வீட்டிற்குச் சென்ற 19 வயது இளம்பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு மாவட்டம் மனந்தவாடி பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு 3 நாட்களுக்கு முன்பு 19 வயதான அலீனா என்ற இளம்பெண் சென்றுள்ளார். இந்நிலையில், அந்த உறவினர் வீட்டில் அலீனா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் நிர்வாணமாக இருந்ததுடன், உடலில் பலத்த காயங்களும் ரத்தக் கறைகளும் காணப்பட்டதால் அவரது மரணத்தில் தீவிரமான சந்தேகம் எழுந்துள்ளது.

அலீனா இறப்பதற்கு முன்பு அச்சத்துடன் அலறியபடி ஓடியதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இந்த மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
