அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை !! நிலத்தடி நீரில் 250 மடங்கு பாதரசம்!!
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் என்எல்சி நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக 25000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி தற்போது தான் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதற்குள் மற்றும் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அனல் மின் நிலையம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வருபவர்கள் சமீபகாலமாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து 121 வீடுகள் மற்றும் 37 இடங்களில் பூவுலகின் அமைப்பின் சார்பில் மண் மற்றும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் முடிவுகள் 'மின்சாரத்தின் இருண்ட முகம்' என்ற பெயரில் வெளிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கை முடிவுகளின் படி “வடக்குவெள்ளூர், தொல்காப்பியர் நகரில், குடிப்பதற்காகவும் வீட்டுத் தேவைக்காகவும் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரில் 250 மடங்கு பாதரசம் அதிகரித்துள்ளது. வெள்ளாளன்குளம் பகுதியில் 30 மடங்கு துத்தநாகமும், 29 மடங்கு செம்பு, 28 மடங்கு நிக்கலும் தண்ணீரில் கலந்துள்ளது. மேலும், இங்குள்ள தண்ணீரில், ஃப்ளோரைடு, இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சிலிகான் போன்றவற்றின் விகிதமும் அதிகரித்திருப்பதால் குடிக்க உகந்தது இல்லை” என்ற அதிர்ச்சி தரும் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
என்.எல்.சி.யின் சுற்று வட்டாரப்பகுதிகளில் 31 இடங்களில் 17 இடங்கள் மிகக் கடுமையாகவும், 11 இடங்கள் கடுமையாகவும் மாசடைந்துவிட்டது. 101 வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 89 வீடுகளில் சிறுநீரகம், தோல் அல்லது மூச்சுத் திணறல் சார்ந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதிகளில் வசிப்போருக்கு நரம்பு மண்டல பாதிப்பு, செரிமான பிரச்சினை, சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாய நிலம், குடிநீர் ஆதாரங்களில் அனல் மின் நிலைய கழிவுகள் சேர்ந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் அனைத்துமே மக்கள் இனம் வாழ்வதற்கு லாயக்கற்ற பகுதியாக மாறிவிட்டது. உடனடியாக நெய்வேலி நிலக்கரி நிறுவனமும், மத்திய மாநில அரசுகளும் தீவிர கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பூவுலக நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?