இன்று பூமி பூஜை... மதுரையில் ஆக.25ல் தவெக 2வது மாநில மாநாடு.. விஜய் அறிவிப்பு!
மதுரையில் ஆகஸ்ட் 25ம் தேதி தமிழக வெற்றிக் கழத்தின் 2வது மாநில மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழகத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஒருபுறமும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மறுபுறமும் இருக்க நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் இரண்டு கட்சிகளும் தனித்தனியே களமிறங்கியுள்ளனர்.

தவெகவின் முதல்வர் வேட்பாளர் நான் தான் என விஜய்யும் அறிவித்துள்ளதால், தேர்தல்களத்தின் தீவிரம் இன்னும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் கடந்தாண்டு அக்டோபர் 27ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தற்போது 2வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை மாநாட்டுக்கான பூமிபூஜை நடைபெற்றது. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், பூமி பூஜையில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
