கீழடியில் ஒரே குழியில் 3 வகையான பண்டைய வடிகால் அமைப்புகள் கண்டுபிடிப்பு!

 
கீழடி அகழாய்வு வடிகால் அமைப்புகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழாய்வில், சங்க காலத் தமிழர்களின் தொழில்நுட்ப அறிவை உலகிற்குப் பறைசாற்றும் வகையிலான மிக முக்கிய மற்றும் அரிய தொல்லியல் கண்டுபிடிப்பு ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.

கீழடியில் இதற்கு முந்தைய அகழாய்வுப் பணிகளின் போது தனித்தனியாகக் கண்டறியப்பட்ட மூன்று வெவ்வேறான வடிகால் அமைப்புகள், தற்பொழுது நடைபெற்று வரும் அகழாய்வில் முதன்முறையாக ஒரே குழியில், அதுவும் மூடிய நிலையில் கண்டறியப்பட்டுத் தொல்லியல் துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

செங்கல் வடிகால் அமைப்பு, சுருள் வடிவக் குழாய் வடிகால், பீப்பாய் வடிவக் குழாய் வடிகால் என மூன்று வகைகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் இந்த மூன்று அமைப்புகளும் இணைந்தவாறு கண்டறியப்பட்டிருப்பது, சங்க கால மக்களின் மேம்பட்ட நகரமைப்பு மற்றும் கழிவுநீர் மேலாண்மைக்கு மிக வலுவான சான்றாக அமைந்துள்ளதாகத் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கழிவுநீர் வெளியேறும் பாதையை மூடிய அமைப்பாக வடிவமைத்திருப்பது, அக்கால மக்கள் சுகாதாரம் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. வெவ்வேறு வடிவக் குழாய்களை ஒரே வடிகால் அமைப்பில் இணைத்துப் பயன்படுத்தியிருப்பது, 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பெற்றிருந்த சிறந்த பொறியியல் அறிவை வெளிப்படுத்துகிறது.

கீழடியில் தொடர்ந்து கிடைத்து வரும் இந்த அடுத்தடுத்த அறிவியல் பூர்வமான சான்றுகள், வைகை நதிக்கரை நாகரிகம் எவ்வளவு நவீனம் அடைந்த ஒரு நகர நாகரிகமாகத் திகழ்ந்துள்ளது என்பதை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியுள்ளது.