3 சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்: 42 இந்தியர்கள் உயிர் தப்பியது எப்படி?
மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய பணியாளர்கள் இருந்த 3 சரக்கு கப்பல்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருந்த 42 இந்திய பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஓமன் வளைகுடா பகுதியில் கடந்த 8-ம் தேதி இரவு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ‘ரீஸ்கோ’ கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த கப்பலில் இருந்த 21 இந்திய பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறி ஈரான் துறைமுகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அதே இரவு ‘ஹாரிசான் 1’ என்ற சமையல் எரிவாயு கப்பலும் தாக்கப்பட்டது. இதில் 14 இந்தியர்கள் உள்பட 16 பேர் இருந்தனர். அருகில் இருந்த மற்றொரு கப்பலின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.அடுத்த நாள் ‘மெர்சின் பிராஸ்பெரிட்டி’ என்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கப்பலில் இருந்த 7 இந்திய பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இதன் மூலம் 3 கப்பல்களில் இருந்த மொத்தம் 42 இந்திய பணியாளர்களும் உயிர் தப்பியுள்ளனர். மேற்காசியா மோதல் தொடங்கியதில் இருந்து இந்திய பணியாளர்கள் தொடர்புடைய கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
