தேர்தல் சோதனையில் காரில் கடத்தப்பட்ட 40 வைரக் கற்கள் பறிமுதல்!

 
வைரம் பறிமுதல் வைரம் பறிமுதல்

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நிலவி வரும் நன்னடத்தை விதிமுறைகளின்படி, சென்னை மாநகர் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் சுமார் 2:40 மணியளவில், சென்னை மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் தேர்தல் நிலைக்கண்காணிப்புக் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சோதனை

காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். காரைச் சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 வைரக் கற்கள் கண்டறியப்பட்டன. வைரக் கற்களைக் கொண்டு சென்றவர்களிடம் அதற்கான உரிய ரசீதுகளோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களோ இல்லை. தேர்தல் நேரத்தில் ₹50,000-க்கு மேல் ரொக்கப்பணம் அல்லது அதற்கு இணையான மதிப்புள்ள ஆபரணங்களைக் கொண்டு செல்லும்போது முறையான ஆவணங்கள் அவசியம் என்ற விதியை அவர்கள் மீறியுள்ளனர்.

சோதனை தேர்தல் நடத்தை விதிமுறைகள் விதிகள்

பறிமுதல் செய்யப்பட்ட 40 வைரக் கற்களின் சந்தை மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக நகை மதிப்பீட்டாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கற்கள் மாதவரம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பின்னர் இவை அரசு கருவூலத்தில் (Treasury) வைக்கப்படும்.

இந்த வைரக் கற்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? யாரிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டது? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.