கப்பலில் கடத்தப்பட்ட 400 கோடி ஹெராயின்.. அதிரடியாக பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர்..!

 
ரூ.400 கோடி ஹெராயின் பறிமுதல்
படகு மூலம் கடத்தப்பட்ட ரூ.400 கோடி ஹெராயினை கடற்படையினர் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் உள்ள காலி துறைமுகம் மேற்கு கடல் பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இலங்கை புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து இலங்கை கடற்படை, கடலோர காவல்படையினர், இலங்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் அதிகாலை இலங்கை கடலோர காவல்படைக்கு சொந்தமான சமுத்திர ரக்ஸா கப்பலில் சென்ற படையினர் காலி துறைமுகத்தில் இருந்து, 91 நாட்டிக்கல் மைல் தொலைவில் மாத்தறை அருகில், தொன்ட்ரா கடல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது தொன்ட்ரா மீன்பிடி துறைமுக கடலில் நின்றிருந்த இலங்கை படகை சோதனை செய்தனர். இதில், படகின் அடிப்பகுதியில் 160 பார்சல்களில் 180 கிலோ ஹெராயின் பவுடர் மற்றும் 28 பார்சலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 கிலோ கிராம் எடை உள்ள மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களை கைப்பற்றினர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.400 கோடியாகும்.

இது தொடர்பாக இலங்கை தொன்ட்ரா மற்றும் கொட்டேகொடா பகுதியைச் சேர்ந்த நபர்கள் சிலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து இலங்கை கடற்படை வைஷ் அட்மிரல் பிரியன்தா பெரேரா கூறுகையில், ‘இந்த ஆண்டு மட்டும் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1516 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது’ என்றார்.

From around the web