வீட்டின் பூட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை.. 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பூட்டிய வீட்டை உடைத்து 46 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபரை, மாவட்டக் காவல்துறை தொழில்நுட்ப விசாரணையின் மூலம் ஒரே நாளில் கைது செய்து அசத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறும்பனை பகுதியைச் சேர்ந்தவர் சுஜின் மோன். இவரது மனைவி மேரி கிபி லின்சா. இவர்களது பூட்டிய வீட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சுமார் 46 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரேகா ஆர். நங்லட் மேற்பார்வையில், ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப விசாரணையின் அடிப்படையில், இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது முட்டம் பகுதியைச் சேர்ந்த தாசன் என்பவரது மகன் சகாய ஜோஸ் ஆண்டனி என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை விரைந்து கைது செய்த போலீசார், அவரிடமிருந்து திருடப்பட்ட 46 பவுன் நகைகளையும் முழுமையாக மீட்டனர்.
புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கண்டறிந்து, நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரின் துரித நடவடிக்கையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
