அதிர்ச்சி வீடியோ ... கோயில் பிரசாதம் சாப்பிட்ட 600 பேர் மருத்துவமனையில் அனுமதி!
மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில் கோவில் ஒன்றில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட 600 கிராம மக்கள் குமட்டல், தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை உணர்ந்து, உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் பற்றாக்குறை இருந்ததால், பலருக்கும் மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானாவில், லோனார் தாலுகாவில் உள்ள கபர்கெடா கோவிலில் நடந்த ஒரு நிகழ்வின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது, பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பக்தர்கள் உடனடியாக குமட்டல், தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பிரசாதம் வாங்கி சாப்பிட்ட சிறுவர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளானார்கள். உடனடியாக அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், படுக்கைகள் பற்றாக்குறையால் அவர்களில் பலர் மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. நூற்றுக்கணக்கான நோயாளிகள் தரையில் கிடத்தப்பட்டு, கயிறுகளில் சலைன் பாட்டில்கள் கட்டப்பட்டிருப்பதும், மரங்களில் சலைன் பாட்டில்கள் பிணைக்கப்பட்டிருப்பது போன்றும் காட்சிகள் இணையத்தில் பரவி மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பாதிப்புக்குள்ளான 600 பேர்களில், 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து புல்தானா மாவட்ட ஆட்சியர் கிரண் பாட்டீல் கூறுகையில், மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் மற்றும் பிற தேவையான உபகரணங்களுடன் மருத்துவர்கள் குழு கிராமத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பிரசாத்தின் மாதிரிகள் ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.