தனியார் பள்ளியில் 62 மாணவர்களுக்கு நோரா வைரஸ் அறிகுறி.. பெற்றோர் அதிர்ச்சி !!

 
norovirus

நோரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் மாணவர்கள் சிலருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். தகவல் அறிந்து அங்கு சென்ற சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தினர். இதில் சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இவர்கள் மூலம் மாணவர்களுக்கும் நோரா வைரஸ் பரவி இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து பள்ளியில் நோய் அறிகுறியுடன் காணப்பட்ட 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்தனர். அவை பொது சுகாதார ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 2 மாணவர்களுக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

school

மேலும் அந்த மாணவர்களின் பெற்றோரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே நோரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் முழுமையான சுகாதார நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேபோல், கொச்சி பகுதியில் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 

நோரா வைரஸ் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமே பரவுகிறது என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். வீடுகளில் குளோரின் கலந்த குடிநீரையே பயன்படுத்தவேண்டும், பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தும் முன்பு நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும், விலங்குகளுடன் பழகும்போது கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
 

From around the web