70% தீக்காயம்... 2 பெண்களை எரித்துக் கொல்ல முயன்றவர் கைது... அருப்புக்கோட்டையில் கொடூரம்!

 
கொலை கொலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி பகுதியில், இரண்டு பெண்களை மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொல்ல முயன்ற வழக்கில் 60 வயது முதியவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாளையம்பட்டி பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண், தனது கணவரை இழந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த முத்து (60) என்ற முதியவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கணவரை இழந்த சாந்தியைத் தன்னுடன் வந்து வாழுமாறு (மறுமணம் செய்யுமாறு) முத்து தொடர்ச்சியாக வற்புறுத்தி, ஆசை வார்த்தைகளைக் கூறி வந்துள்ளார். ஆனால், முத்துவின் இந்தத் திட்டத்திற்குச் சாந்தி முற்றிலும் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் சாந்தி மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்த முத்து, அவரைப் பழிவாங்கச் சரியான சமயம் பார்த்துக் காத்திருந்துள்ளார்.

தீக்குளிப்பு

சம்பவத்தன்று சாந்தி, தனது தோழியான ஸ்ரீதேவி என்ற பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்து, திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயைச் சாந்தி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவர் மீதும் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

பெண்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சாந்திக்கு 70 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீதேவிக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீக்குளிப்பு

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அருப்புக்கோட்டை போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த முத்துவைத் தேடி வந்தனர். தப்பியோட முயன்ற முதியவர் முத்துவை மடக்கிப் பிடித்த போலீசார், அவரைக் கொலை முயற்சி வழக்கில் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர். பெண்கள் இருவர் மீது முதியவர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.