அதிர வைத்த மொபைல் ஆஃப்... போதைப்பொருள் பயன்படுத்திய 8 பேர் கைது!
திருச்சியில் போதை மருந்து பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மொபைல் ஆஃப் மூலம் ஒன்றிணைந்தது தெரிய வந்துள்ளது.
திருச்சியில் ஓரினச்சேர்க்கையாளர்கள் சிலர் ஒன்று சேர்ந்து போதை மருந்துகளை பதுக்கி வைத்துக் கொண்டு விற்பனை செய்து வருவதாக திருச்சி மாவட்ட எஸ்பி., வருண்குமாருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து எஸ்பியின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் திருச்சி கொள்ளிடம் பகுதியில் நேற்று திடீரென சோதனையின் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் தங்கியிருந்த மணிகண்டன் (23), சிஜூ (33), பாலசுப்பிரமணியன் (38), கர்நாடகா மாநிலம் கோலார் வட்டத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (42), திருச்சி மன்னார்புரம், ராஜராஜன் நகரைச் சேர்ந்த வினோத்குமார் (28), திருநெல்வேலி, வி.எம்.சத்திரம், டிஎன்எச்பி காலனியைச் சேர்ந்த ராமசாமி (42), சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த பார்த்திபராஜ் (31), திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த சுபீர் அஹமத் (37), ஆகிய 8 பேரைக் கைது செய்து கொள்ளிடம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், கிரிண்டர் (grindr) என்ற சமூக வலைதள செயலி மூலமாக இவர்களுக்குள் பழக்கமாகி, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்காக, போதை மருந்துகளை உபயோகித்து வந்தது தெரிய வந்தது.

மேலும், அந்த சமூக வலைதள செயலியில் உள்ள நபர்களுக்கு போதை மருந்துகளை டிடிடிசி கூரியர் மூலமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக டிடிடிசி நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பி, விசாரணை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அவர்களிடமிருந்து மெத்தபெட்டமின், ஊசிகள், 16 கிராம் தங்க சங்கிலி, 5 செல்போன்கள், கேமிரா 1, மோடம் 2, சோடியம் குளோரைடு, ரூ.5,145 பணம், கார் ஆகியவற்றை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட 8 பேரையும் போலீசார் ஸ்ரீரங்கம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
