தமிழகத்தில் 8,963 பேருக்கு டெங்கு பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்!
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூலை 16-ஆம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 8,963 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தத் தொடர்ந்து தீவிரத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாநிலம் முழுவதிலும் பதிவான டெங்கு பாதிப்புகளில் தலைநகர் சென்னையிலேயே அதிகளவிலான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இதுவரை 1,656 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல், திருவள்ளூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மாநிலம் முழுவதும் மொத்தம் 3 பேர் டெங்கு பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு காய்ச்சலின் வீரியமும் பாதிப்பு எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளதாகச் சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்ட தொடர் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள், கொசு உற்பத்தித் தடுப்புப் பணிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பணிகளுமே பாதிப்பு குறைந்துள்ளதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
