அமெரிக்காவில் பல்கலைக்கழக அருகே துப்பாக்கிச் சூடு - 9 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் அருகே அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இண்டியானா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே, புகழ்பெற்ற சைக்கிள் பந்தயப் போட்டிக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கொண்டாட்டங்கள் இன்று அதிகாலை நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், திடீரென மக்கள் கூட்டத்தை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
இந்தத் தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் கண்காணித்து வருகிறது.
தாக்குதலை நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தாக்குதலுக்கான பின்னணி என்ன? இது திட்டமிட்ட தாக்குதலா அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமா என்பது குறித்து அமெரிக்கப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவில் பொது இடங்களிலும் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
