மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்கில் விழுந்து 6 வயது சிறுவன் பரிதாப பலி.. 2 பேர் சஸ்பெண்ட் !!

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மூடப்படாமல் இருந்த, செப்டிக் டேங்கில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் மணிகண்டன். இவர் வெங்கிடாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் பிடிக்க தனது 6 வயது மகன் பிரதீஷூடன் சென்றார். அப்போது கூட்டம் அதிகமாக இருக்கவே மணிகண்டன் தண்ணீர் பிடிப்பதில் கவனம் செலுத்தி உள்ளார்.
தண்ணீர் பிடித்தபின் குழந்தை காணாமல் போனதால் அதிர்ந்த மணிகண்டன் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். மகனை காணவில்லை என தேடிய மணிகண்டனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஊராட்சி அலுவலக வளாகத்தில் திறந்த நிலையில் இருந்த ‘செப்டிக் டேங்க்’ உள்ளே பார்த்தபோது பிரதீஷ் மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். தொடர்ந்து, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரதீஷ் ஏற்கனெவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூடப்படாத செப்டிக் டேங்கில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் கவனக்குறைவாக இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் உத்தரவுப்படி ஊராட்சி செயலர் ரேணுகா, டேங்க் ஆபரேட்டர் குணசேகரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜியிடம் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.