அதிரடி உத்தரவு!! சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு சிறை!!
புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார் . இது குறித்து புதுவை போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இருசக்கர வாகனங்களில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி உள்ள நிலையில் இருவரும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்தல் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவோருக்கும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் மற்றும் பயணிப்போருக்கும் முதல்முறை ரூ.1,000 மட்டுமின்றி 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், புதுவையில் சமீப காலமாக சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டி செல்வது அதிகரித்து வவதாகவும், இவ்வாறு வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுவர்கள் ஓட்டும் வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஒரு வருடம் வரை ரத்து செய்யப்படும் என்றும், வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுனர் மற்றும் ஓட்டுநர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சிறார் சட்டத்தின்கீழ் வழக்கும் தொடரப்படும் என்றும் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.