கலைகட்டிய இரட்டை மாட்டு வண்டி பந்தயம்..!!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூர் சாலையில் இளங்கோ தேவர் நினைவு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் சிவகங்கை ,தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 51 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன. முதலாவதாக பெரிய மாடு 19 ஜோடிகள் ஒரு பிரிவாகவும் சிறிய மாடு 32 ஜோடிகள் இரண்டு பிரிவுகளாகவும் என மொத்தம் 3 பந்தயங்களாக நடத்தப்பட்டன.
இதில் பங்கேற்ற பந்தய மாடுகள் பெரிய மாடு பந்தய எல்கையாக சிங்கம்புணரியில் இருந்து சிலநீர்பட்டி பாலம் வரை 8 மைல் தூரமும், சிறிய மாடு பந்தய எல்கையாக சிங்கம்புணரியில் இருந்து எஸ்.வி.மங்கலம் வரை 6 மைல் தூரமும் நிர்ணம் செய்யப்பட்டது.
கமிட்டியினர் கொடி அசைத்தவுடன் மாட்டு வண்டிகள் எல்கையை நோக்கி மின்னலென சீறிப்பாய்ந்து சென்றன. பந்தயத்தை காண சிங்கம்புணரி காளாப்பூர் எஸ்.வி.மங்கலம் பொதுமக்கள் அதிகாலையிலேயே சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர். பந்தயத்தில் வெற்றிபெற்ற பந்தயமாட்டின் உரிமையாளர்களுக்கு இளங்கோ தேவர் நினைவுகுழு மற்றும் வண்டிபந்தய இளைஞர்கள் குழு சார்பில் ரொக்க பரிசுத் தொகை வழங்கப்பட்டது
பந்தயத்தில் வெற்றி பெற்ற பெரிய மாடுகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 15000, இரண்டாம் பரிசாக ரூபாய் 12000 மூன்றாம் பரிசாக ரூபாய் 9000 நான்காம் பரிசாக ரூபாய் 6000 வழங்கப்பட்டது.
சின்ன மாடு பந்தயத்தில் இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்ற காரணத்தினால் முதல் பரிசு 12000 ஐ இரண்டு பேருக்கும், இரண்டாம் பரிசு 9000 மு இரண்டு பேருக்கும், மூன்றாம் பரிசு 6000 ஐ 2 பேருக்கும், நான்காம் பரிசு 4000 ஐ இரண்டு பேருக்கும் என மொத்தம் 12 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பெரிய மாடு பந்தயத்தில் முதல் பரிசாக நகரம்பட்டி வைத்தியா, இரண்டாம் பரிசு இலங்கைகுலம் வீர முனியசாமி, மூன்றாம் பரிசு பெருமாள்பட்டி ராஜா தேவர், நான்காம் பரிசாக கடம்பூர் புதுப்பட்டி அம்பாள் கணேசன் தட்டிச் சென்றனர்.
சிறிய மாட்டில் முதல் பரிசாக தளக்கவயல் காளிமுத்து கோனார், தாயமங்கலம் முத்துமாரியும், இரண்டாம் பரிசாக கோட்டநத்தம்பட்டி மகாதேவன் லட்சுமணன் சத்திரப்பட்டி ஜெயபாலகிருஷ்ணனும், மூன்றாம் பரிசாக மனப்பட்டி அலெக்ஸ் பிரபாகர் கண்ணன் மேலூர் கவுசிக்கும், நான்காம் பரிசை சொக்கம்பட்டி செந்தில் சூரக்குண்டு அமர்நாத், சிங்கம்புணரி இளங்கோ தேவர் நினைவாக தான்யா சதீஷ் ஆகியோர் தட்டிச் சென்றனர்