உஷார்!! நாளை 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 27,28,29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறில் அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை, நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருக்குவளை, திருவிடைமருதூர், அய்யம்பேட்டை, முகையூர் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவாரூர், அகரம் சீகூர், வேப்பூர், காட்டுமலையூர், கீழச்செருவை, லப்பைக்குடிகாடு, ஜெயங்கொண்டம், பரங்கிப்பேட்டை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.