காதலியின் சடலத்துடன் 2 நாட்கள் வசித்த காதலன்!! பகீர் பிண்ணனி!!
சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பல்வேறு தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி தனியாருக்கு சொந்தமான ஒரு தங்கும் விடுதியில் கடந்த 3-ந்தேதி இரவு மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளம் ஜோடியினர் அறை எடுத்து தங்கினார்கள். அவர்கள் தங்கியிருந்த அறை கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை விடுதி ஊழியர்கள் அறைக்கு அருகே சென்றபோது துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற திருவல்லிக்கேணி போலீசார் ஆய்வு செய்தபோது அறையின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. இதனால் வேறுவழியின்றி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை மீது இளம் ஜோடி இருவரும் பிணமாக கிடந்தனர்.
சடலங்களை மீட்ட போலீசார் அவற்றை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இருவரும் மேற்கு வங்காள மாநிலம் பங்குரா பகுதியை சேர்ந்த காதல் ஜோடியான பிரசெஞ்சித் கோஷ், அர்பிதா பால் என்று தெரிய வந்தது. இருவரும் கணவன்&-மனைவி என்று கூறி விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
இறந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. மேலும் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ததற்கான தடயமும் காணப்பட்டதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
காதலியின் முகத்தில் தலையணையை அழுத்தி கொலை செய்துவிட்டு பிரசெஞ்சித் கோஷ் 2 நாட்கள் சடலத்துடன் தனியாக இருந்த பின்னர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் காதல் ஜோடி இருவரும் மேற்கு வங்காளத்தில் இருந்து எதற்காக சென்னை வந்தனர்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்த தகவல் மேற்கு வங்க போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவன், மனைவி என்று அறையில் அறை எடுத்து தங்கிய காதல் ஜோடி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் திருவல்லிக்கேணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது