கொடூரம்.. நாயை, நாய் என அழைத்ததற்காக முதியவர் அடித்துக்கொலை !!

 
ராணி

திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு அருகே உலகம் பட்டியார் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராணி. இவரது வீட்டின் அருகே ராயப்பன் (65) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ராணி தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். ஆனால், அந்த நாய் வீட்டின் அருகே செல்பவர்களை பார்த்து குறைப்பதும், துரத்துவதுமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ராயப்பனை பார்த்தும் குறைத்து கடிக்க பாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், ராணிக்கும், ராயப்பனுக்கும் விரோதமும் ஏற்பட்டுள்ளது.

அதோடுமட்டுமல்லாமல், ராயப்பன் ஊர் பெரியவர்களிடம் ராணி வளர்க்கும் நாய் எனது பேரக்குழந்தைகளை கடிக்க வருவதாகவும், அந்த நாயை கட்டி வைத்து வளர்க்குமாறு கூறியதற்கு என்னிடம் சண்டைக்கு வருவதாகவும் முறையிட்டுள்ளார். ஊர் திருவிழா நிறைவு பெற்றதும் இது குறித்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என ஊர் பெரியவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராணி

இந்நிலையில், ராயப்பன் பேரக்குழந்தைகளுடன் வந்துகொண்டிருந்தபோது, நாய் அருகில் வராமல் இருப்பதற்காக கையில் குச்சி எடுத்து வைத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ராணியின் மகன்களான வின்சென்ட் மற்றும் டேனியல் நாங்கள் செல்லமாக வளர்க்கும் நாயை, நாய் என்று கூறுவாயா? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ராணியின் இரு மகன்களும் சேர்ந்து ராயப்பனை கட்டையால் தாக்கி கீழே தள்ளியுள்ளனர். மேலும் சேவல் சண்டைக்கு பயன்படுத்தப்படும் கத்தியைக் கொண்டு டேனியல் ராயப்பனின் மார்பு பகுதியில் தாக்கியுள்ளார். இதில் ராயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராணி

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரில் அங்கு சென்ற போலீசார், டேனியல், வின்சென்ட், ராணி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாயை, நாய் என்று அழைத்ததற்காக முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web