ஈரோடு இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டி?

 
vote

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா திடீர் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. அடுத்த மாதம் 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் அணையம் அறிவித்துள்ளது.  இதனையடுத்து இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக சார்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.  அதிமுகவில் இருந்து சென்ற டிடிவி தினகரனும், அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. சிவகங்கை அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் நடந்த கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.

vote

நிகழ்ச்சிக்கு  பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அமமுக  சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்று வருகிற 27ஆம் தேதி அறிவிக்கப்படும். அங்கு நானே போட்டியிட வாய்ப்புள்ளது. அமமுக 2 அணிகளும் இணைவது என்பது அத்தைக்கு மீசை முளைப்பது போன்றதாகும்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரச்சினையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. அவர்களுக்குள்ளேயே பிரச்சினை இருக்கும் போது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி என்பது சாத்தியமில்லை. அதிலும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணிக்கு வாய்ப்பில்லை.

தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. இதனால் அவர்கள் மக்களை சந்திக்க அஞ்சி ஒளிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் தோற்கடித்து தி.மு.க.வுக்கு மக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார்கள், என டிடிவி தினகரன் கூறினார்.

From around the web