கஞ்சா டோர் டெலிவரி! அ.தி.மு.க. பிரமுகரை தட்டி தூக்கிய தனிப்படை!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கஞ்சாவை டோர் டெலிவரி செய்த அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது .
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு ஆபரேஷன் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துரை எடுத்து வருகிறது. இருப்பினும் கஞ்சாவை மறைமுகமாக சிலர் விற்பனை செய்து வருவதும் அதிகரித்துள்ளது. அவர்களை அவ்வப்போது கைது செய்யும் காவல்துறை அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு அம்மா பேரவை செயலாளராக பதவி வகித்து வருபவர் ரமேஷ். இவர் தனது இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை வைத்துகொண்டு வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவெரி செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை நோட்டமிட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ரமேஷ் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சாவை டோர் டெலிவரி செய்த போது தனிப்படையிடம் கையும் களவுமாக சிக்கினார்.
பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரே கஞ்சாவை தனது மோட்டார் சைக்கிளில் வைத்து டோர் டெலிவரி செய்து போலீசில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரமேசுக்கு எப்படி கஞ்சா கிடைத்தது? அவருடன் யார், யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.